Friday, July 11, 2008

ஆனித் திருமஞ்சனம்

அம்பலத்தாடும் எம் ஐயன் ஆடல் காணீரோ
ஆனி உத்திர நன்னாளில் ஆடல் காணீரோ.






ஆனி உத்திர நந்நாளில் ஆனந்தக் கூத்தனுக்கு ஒரு போற்றி


கனக சபேசா கயிலை மலையானே போற்றி போற்றி

காருண்யா மூர்த்தி கங்காளனே போற்றி போற்றி

கிஞ்சுக வாயவள் பாகா போற்றி போற்றி

கீதா நாயகன் காணா மல்ர்ப்பாதா போற்றி போற்றி

குரு மூர்த்தியாய் அறமுரைத்தவனே போற்றி போற்றி


கூடல் இலங்கு குருமணி போற்றி போற்றி

கெடில நாடா அப்பருக்கு அருளியவா போற்றி போற்றி

கேடில் விழுப்பொருளே போற்றி போற்றி

கைலை நாதா கனகமணிக்குன்றே போற்றி போற்றி

கொல் புலித்தோல் அணிந்தவா போற்றி போற்றி

கோயிலில் ஆடும் ஆனந்தக் கூத்தனே போற்றி போற்றி

கௌபீனம் அணிந்தவனே போற்றி போற்றி.

* * * * * * *

பரையிடமா நின்று மிக பஞ்சாக்கரத்தால்

உரையுணர்வுக்கு எட்டா ஒருவன் - வரை மகள் தான்

காணும் படியே கருணையுருக் கொண்டாடல்

பேணும் அவர்க்கு உண்டோ பிறப்பு.

ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெருஞ்சோதியான ஆனந்த தாண்டவன் திருவந்தெழுத்தாலாகிய திருமேனியுடன்,

ந - திருவடி,

ம - உதரம்,

சி - தோள்,

வ - திருமுகம்,

ய - திருமுடி.


மருவுந் துடியுடன் மன்னிய வீச்சு


மருவிய அப்பும் அனலுடன் கையும்


கருவின் மிதித்த கமலபாதமும்


உருவில் சிவாய நம எனஓதே

ஓம் - திருவாசி

சி - உடுக்கை,

வா - வீசுகரம்,

ய - அபய கரம்,

ந - அனல்,

ம -ஊன்றிய கால்



என்று ஐயன் , மலையரசன் பொற்பாவையை இடமாகக் கொண்டு அவ்ள் மகிழ்ந்து காண ஆடும் ஆனந்தக்கூத்தினை கண்டவர்களுக்கு மறு பிறவியில்லை. எனவே ஆனி உத்திர திருமஞ்சன தினத்தில் ஆனந்த நடராசரின் அழகு மிகு தரிசனங்கள் கண்டு உய்வோம்.







திருவாரூர் ஆலயத்தின் இரு ஓவியங்கள்







ஊர்த்துவ தாண்டவ மூர்த்தி ஓவியம்




ஆடும் படிகேள் நல் அம்பலத்தான் ஐயனே




நாடுந் திருவடியிலே நகரம் - கூடும்




மகரம் உதரம் வள்ர் தோள் சிகரம்




பகருமுகம் வா முடியப்பார்.



கருப்பு வெள்ளைப் படங்களில் ஐயனின் எழிற் கோலம்










திருத்தேரில் மரச்சிற்பமாய் ஐயன்
என் ஐயனின் எழிற் கோலத்தை எப்படி தரிசித்தாலும் ஆனந்தமே. ஆனந்தத்தாண்டவனை தரிசித்தால் மட்டும் போதும் முக்தியே.



தில்லையில் பத்தாம் நாள் ஆனி திருமஞ்சன தினத்த்ன்று அதிகாலை பிரம்ம முகூர்த்தத்தில் இராஜ சபையின் முகப்பு மண்டபத்தில் அம்மைக்கும் அப்பனுக்கும் ஆயிரங் குடங்கள் பால், தயிர், தேன், பஞ்சாமிதம், பன்னீர், இளநீர், விபூதி, மஞ்சள், சந்தனம் என்று அற்புதத் திருமஞ்சனம் என்னும் மஹாபிஷேகம்.




பகல் பத்து மணிக்கு இராஜ சபையில் உள்ளே அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகர், சகல புவனங்களையும் படைத்தும் காத்தும், கரந்தும் விளையாடும் அண்டர் நாயகனுக்கும் அவரின் வாம பாகத்தில் நீங்காமல் இருக்கும் சிவானந்தவல்லிக்கும் திருவாபரண அலங்கார காட்சி. சகல புவன இராஜாவிற்கு சிறப்பு பூஜைகள்.



பகல் பன்னிரண்டு மணிக்கு ஆனித் திருமஞ்சன மஹா தரிசனம். சித் சபையில் இரகசிய பூஜை. பஞ்ச மூர்த்திகள் உலா மற்றும் தீர்த்தவாரி. இராஜ சபையிலிருந்து ஆனந்த தாண்டவத்துடன் ஞானகாச சித்சபா பிரவேச தரிசனம்.




சென்ற வருட ஆன உத்திர பதிவுகளைக் காண சொடுக்குங்கள் இங்கே













பாட வேண்டும் நான்; போற்றி! நின்னையே

பாடி நைந்து நைந்து உருகி நெக்கு நெக்கு



ஆட வேண்டும் நான்; போற்றி அம்பலத்து

ஆடும் நின் கழல் போது நாயினேன்



கூட வேண்டும் நான்; போற்றி! இப்புழுக்

கூடு நீக்கு எனைப் போற்றி! பொய் எலாம்



வீட வேண்டும் நான்; போற்றி வீடு தந்து

அருளு; போற்றி! நின் மெய்யர் மெய்யனே!



தென் தில்லை மன்றினுள் ஆனந்தக் கூத்தாடும் மையிலங்கு கண்ணி பங்க , மானேர் நோக்கி உடையாள் மணவாளா, கொம்பர் ஆர் மருங்குல் மங்கை கூற வெண்ணீறா, தில்லை சிற்றம்பலவா! என்று நான் உன்னை போற்றிப் பாடுதல் வேண்டும் . பாட்டிலே அப்படியே மனம் அழிந்தழிந்து கரைந்து உடல் நெகிழ்ந்து நெகிழ்ந்து கூத்தாட வேண்டும் போற்றி. நாம் உய்ய பஞ்ச சபையில் (அனைவர் இதயத்திலும்) ஆனந்த கூத்தாடுகின்ற உன் திருவடித்தாமரையை நான் அடைய வேண்டும் போற்றி. முன் கர்ம வினையினால் பெற்ற இந்தப் புழுக்கூடான சரீரத்தில் இருந்து விடுதலை செய்தருள வேண்டும் போற்றி.பொய்யிடத்தை விட்டு உன் திருவடி நீழலில் இருக்க அருள வேண்டும் போற்றி. உன் மெய்யன்பர்களுக்கு மெய்யாய் இருப்பவனே இனி ஒரு அன்னை கருப்பை வராமல் கா போற்றி.
சுபம்

2 comments:

jeevagv said...

படங்களிலும் பாடல்களிலும் கண்ணுக்கினியவனை தரிசித்தேன், மிக்க நன்றி.

S.Muruganandam said...

மிக்க நன்றி ஜீவா அவர்களே.

திருசிற்றம்பலம்.