Saturday, May 2, 2009

திருக்காரணி சந்திரப்பிறை சேவை

இரண்டாம் நாள் மாலை சந்திரப்பிறை

கோபுர வாசல் தரிசனம் கோடி புண்ணீயம்

இரண்டாம் நாள் மாலை சந்திரப்பிறையில் எழுந்தருகின்றார் காரணீஸ்வரர்.



சிவபெருமானும் சந்திரனும் ஒரே வீட்டில் பெண் எடுத்தவர்கள். தட்சபிரஜாபதியின் முதல் மகள் தாட்சாயிணி ( சதி தேவி ) தந்தையின் விருப்பத்திற்க்கு எதிராக சிவபெருமானை மணந்து கொண்டதால் தன் மகள் மீதும் சிவபெருமான் மீதும் கோபம் கொண்ட தட்சன் அவர்களை அவமானபடுத்த ஒரு யாகம் நடத்தினான் அந்த முறையற்ற யாகத்தில் தேவர்களும் கலந்து கொண்டனர். தன் தந்தை நடத்தும் யாகத்திற்கு வந்த சதி தேவி அவனால் அவமானப்படுத்த பட்டு யாகத்தை அழிக்க யாக குண்டத்தில் குதிக்கின்றாள். பின் சிவ பெருமானால் அனுப்பபட்ட வீரபத்திரரும், பத்ர காளியும் யாகத்தை அழித்து தேவர்கள் அனைவருக்கும் தண்டனை கொடுத்தனர்.
தட்சனுடைய மற்ற 27 பெண்கள் நட்சத்திரங்கள், அவர்கள் அனைவரையும் பேரழகனான சந்திரனுக்கு மணம் செய்து கொடுத்தான் தட்சன்.



தன் மக்களுக்குள் பாரபட்சம் வரக்கூடாது என்றுதான் தட்சன் தன் 27 மகள்களையும் ஒருவருக்கே மணம் செய்து கொடுத்தான். ஆயினும் சந்திரன் தன் மனைவியருள் ரோகிணியிடம் மற்றும் அன்பு கொண்டு மற்றவர்களை புறக்கணித்ததால் கோபம் கொண்டு தட்சன் அளித்த சாபத்தினால் சந்திரன் தன் கலைகளை எல்லாம் இழந்து குட்ட நோய் பீடித்து நின்றான். பின் சோம வார விரதம் இருந்து சிவ பெருமானை வேண்டிட , கருணா மூர்த்தி சாபத்தை மாற்றி நாள் ஒன்றுக்கு ஒரு கலையாக இழந்து மாதத்தில் ஒரு நாள் அமாவசையன்று கலைகள் இல்லாமல் இருக்குமாறும் பின்னர் கலைகள் வளர்ந்து பௌர்ணமியன்று 16 கலைகளுடன் பூரண சந்திரனாக விளங்குவாய் என்று தட்சன் கொடுத்த சாபத்தை மாற்றி வரம் அளித்தார். மேலும் இளம் பிறையை தமது ஜடாமுடியில் சூடி சந்திர சேகரராக விளங்குகின்றார்

இளம் பிறையை தனது ஜடாமுடியில் அணிந்ததனால் பரமகருணா மூர்த்தி சிவபெருமான் சந்திர சேகரர், சந்திர மௌலீஸ்வரர், சசிதரர் , சோம சுந்தரர், சசி மௌலீஸ்வரர், சோமநாதர், சசாங்க சேகரர், சசிசேகரர், சந்திரசூடன் என்றெல்லாம் போற்றப்படுகின்றார்.

மற்ற தலங்களில் சந்திர வட்டத்திலே ஐயன் பவனி வருவார் இங்கு திருக்கரணியில் சந்திரப்பிறையில் ஐயன் பவனி வரும் அழகைப் பாருங்கள்.

இரண்டாம் நாள் இரவு பவனி வரும் சிவசொர்ணாம்பிகையும், வள்ளி தேவசேனா சமேத சிவசுப்பிரமணிய சுவாமியும். பிண்ணனியில் இராஜ கோபுரம்.


திருக்காரணி
சொர்ணாம்பிகை நவரத்ன மாலை


முத்து


பணிகொள் கற்றைப் புனற் குழலாய்
பசுவேன் போற்றும் பாங்குடையாய்
படரும் ஞானத் திருநீற்றால்
பாசந் தொடராப் பார்ப்பதியே

பிணி கொள் வாழ்வைத் துறப்போரின்
பிறப்பைப் போக்கும் பிஞ்சகியே
பிறையை சூடும் பெருமாட்டி
பீடத்தமரும் பூங்கொடியே

மணிகொள் கண்டன் அணைகின்ற
மயிலே முத்தே மாமையளே
மடங்கொள் அனமே மலைச் செல்வி
மட்டில் முகிழ்த்தாய் முரலுற்றே

அணிகொள் தில்லைச் சிவகாமி
அறங்கூர்ச் சைதைப் பொற்கொடியே
அடிமை கொண்டாய் அருள்வாமி
அன்னாய் சிவசொர் ணாம்பிகையே. (2)


இரண்டாம் நாள் உற்சவத்தின் சிறப்பு: நம் உடலை இரண்டு கூறுகளாக பிரிக்கலாம்.ஒன்று ஸ்தூல உடம்பு கண்ணுக்குப் புலபப்டுவது. இரண்தாவது சூட்சும உடம்பு இது கண்ணுக்கு புலப்படாது. ஐம்பொறிகள் மனம் புத்தி அகங்காரம் உள்ளடங்கியது. இவற்றை உண்மை என எண்ணி மயங்கி நாம் சம்சாரத்தில் உழல்கின்றோம். இறைவா எனக்கு ஈருடல் வேண்டாம், சிவமாகிய நீயே மெய்ப்பொருள், இவ்வுலகத்தை விடுத்து உன் திருவடி வந்து சேருவதே என் வேண்டுகோள் இனி ஒரு அன்னை கருப்பை வராமல் காப்பாற்றி உன் பதமலரில் சேவை செய்யும் பாக்கியம் தா என்று சொர்ணாம்பிகை காரணீஸ்வரரிடம் வேண்டுவதே இரண்டாம் நாள் திருவிழாவின் உண்மையான தாத்பரியம்.



No comments: