Sunday, May 3, 2009

திருக்காரணி அதிகார நந்தி சேவை

மூன்றாம் நாள் காலை அதிகார நந்தி சேவை


ஐயன் சோமாஸ்கந்த மூர்த்தியாய் பிரியாவிடை அம்மையுடன் அதிகார நந்தியிலும் சொர்ணாம்பிகை அம்மன் அன்ன வாகனத்திலும், சிவசுப்பிரமணிய சுவாமி பச்சை மயில் வாகனத்திலும், விநாயகர் மூஷிக வாகனத்திலும், சண்டிகேஸ்வரர் சிறிய ரிஷப வாகனத்திலும் அதிகாலை 6 மணிக்கு அற்புத சேவை சாதிக்கின்றனர்.

மூஷிக வாகனத்தில் முழுமுதற் கடவுள் விநாயகர்

தொண்டை நாட்டின் சிவாலயங்களில் மூன்றாம் நாள் காலை அதிகார நந்தி சேவை சிறப்பாக நடைபெறுவது வழக்கம் அவ்வாறே இத்தலத்திலும் அதிகார நந்தி சேவை சிறப்பாக நடைபெறுகின்றது.

சகல புவன சிருஷ்டி ஸ்த்தி சம்ஹார காரண தேவ தேவ மஹா தேவர் சிவபெருமானின் வாகனமும் கொடியும் நந்தி. அந்த நந்தி தேவர் பொற் பிரம்புடனும், ஐயனைப் போலவே மானும் மழுவும் மேற் கரங்களில் ஏந்தியும் கயிலையில் காவல் புரியும் கோலத்தில் விளங்கும் கோலமே அதிகார நந்தி கோலம்.

ஞானத்தின் இருப்பிடம் நந்தியெம்பெருமான், சிவபெருமானிடமிருந்து வேதங்களையெல்லாம் கற்று அனைவருக்கும் போதித்தவர் இவர். திருமந்திரம் அருளிய திருமூலருக்கு குரு நந்தியே.

நந்தி தேவர் சிவ பக்தியில் மிகவும் சிறந்தவர். எனவே சிவ அபசாரம் செய்பவர்களுக்கு தண்டனை தருவதில் முன் நிற்பவர் இவரே. இராவணன் கையிலாய மலையை அசைத்து போது கோபம் கொண்டு அனுமனால் இலங்கை அழியட்டும் என்று சாபமிட்டவர் இவரே. முறையில்லாமல் தக்கன் ஆணவம் கொண்டு நடத்திய யாகத்தில் தக்கனின் சிரம் அறுந்து விழவும் அவனுக்கு துணை போன வானவர்கள் சூரபதமனால் துன்பப்படவும் சாபமளித்தவர் இவரே.

பொதுவாக திருக்கோவில்களில் ஐந்து நந்திகள் பிரதிஷ்டை செய்யபப்டுவது ஐயனுக்கு அருகிலேயே மூச்சுக்காற்றால் ஐயனை குளிர்விப்பது போல் பிரதிஷ்டை செய்யப்படுபவர் கைலாய நந்தி. இரண்டாவது விஷ்ணு நந்தி, மூன்றாவது
மூன்றாவது நந்தி அதிகார நந்தி இவர் கொடிக்கம்பத்தின் அருகில் பிரதிஷ்டை செய்யப்படுகின்றார். கோவிலுக்குள் வரும் பக்தர்களை உள்ளே விடவும் தடுப்பதற்கும் இவருக்கும் அதிகாரம் உள்ளது. நான்காவது உள்வாயில் நுழைவு நந்தி, ஐந்தாவது விஸ்வரூப நந்தி.

பல தலங்களில் அஞ்சலி ஹஸ்ததுடன் சுயம்பிரபா சமேதராக அதிகார நந்தி தேவர் எழுந்தருளி அருள் பாலிக்கின்றார். இவருக்கு பிரதோஷ காலத்தில் சிறப்பு அபிஷேகம் பூஜைகள் நடைபெறுகின்றது.

ஐயன் ஆனந்த தாண்டவம் ஆடும் போது அதற்கு தாளம் போடுபவர் நந்தியெம்பெருமானே. மேலும் ஐயன் ஆலாலம் உண்டு தேவர்கள், மனிதர்கள் மற்றும் அனைத்து ஜீவராசிகளையும் காப்பாற்றிய பின் தியாகராஜப்பெருமானாக பிரதோஷ காலத்தில் ஆனந்த தாண்டவம் ஆடியதும் நந்தியெம்பெருமானின் கொம்புகளுக்கிடையில்தான்.

அதிகார நந்தி வாகனத்தில் காரணீஸ்வரர்


சிவபெருமானுக்குரிய மானும் மழுவும் மேற்கரங்களில் எந்தி, ஐயனின் திருப்பாதங்களை தன் மற்ற இரு கரங்களில் தாங்கி , நந்தி முகத்துடனும், மனித உடலுடனும், மண்டியிட்டு அமர்ந்த கோலத்தில் கம்பீரமாக அதிகார நந்தி தேவர் ஐயனை தாங்கி வரும் அழகை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை.


அதிகார நந்தி சேவை பின்னழகு

எழில்மிகு திருக்காரணி அதிகாரநந்திதேவர். இவ்வருடம் மராமத்து செய்து புது வர்ணம் செய்யப்பட்டதால் ஒளிர்கின்றார் நந்தீஸ்வரர்.

அழகார் அன்ன வாகனமேறி பவனி வரும் சிவசொர்ணாம்பிகை

ன்னப்பறவையானது பாலையும் நீரையும் கலந்து வைத்தாலும் நீரை நீக்கி பாலை மட்டும் பருகும் ஆற்றல் உள்ளது. அது போல நாமும் நல்லவற்றை மட்டுமே எற்றுக் கொண்டு தீயவற்றை விலக்க வேண்டும் என்று உணர்த்தவே அன்னை அன்னவாகனமேறி அழகாக ஊர்ந்து வருகின்றாள் நம் துயரம் எல்லாம் தீர்க்க.

பொய்யான இந்த உலகியல் விஷயங்களை விடுத்து மெய்ப்பொருளான கடவுளைப் பற்ற வேண்டும் என்பதையே அன்னப்பறவை வாகனம் உணர்த்துகின்றது.

சில மந்திரங்கள் ஹம்ஸ மந்திரங்கள் எனப்படும் அவற்றின் உட்பொருளாக விளங்குபவள் அம்பிகை . அவளை உணர்ந்த சான்றோர்கள் பரமஹம்சர்கள். அத்தகைய சான்றோர்களின் உள்ளத்தில் உள்ளவள் அம்பிகை என்பதை உணர்த்துவதே அன்ன வாகனம்

பச்சை மயில் வாகனத்தில் பன்னிருகையன் தன் தேவியருடன்
பவனி வரும் எழிற் கோலம்


பச்சை மயிலின் அழகிய தோகை


தெற்கு மாட வீதியில் பஞ்ச மூர்த்திகள் பவனி
பிண்ணனியில் இராஜகோபுரம்

ரிஷப வாகனத்தில் சண்டிகேஸ்வரர்

எம்பெருமானுடைய வாகனமான ரிஷப வாகனம் தான் சண்டிகேஸ்வரரின் வாகனம்

அடுத்த பதிவில் காரணீஸ்வரரின் பூத வாகன சேவையை காணலாம்.

No comments: