Wednesday, May 6, 2009

திருக்காரணி நாக வாகன சேவை

நான்காம் நாள் மாலை நாக வாகன சேவை

நாக வாகனத்தில் சொர்ணாம்பிகை

நாகம் அன்னைக்கு குடை. அதுவே அன்னையின் சிறு விரல் மோதிரம். இன்றைய நான்காம் தினம் மாலை குண்டலினி சக்தியான அந்த ஆதி சக்தி உமையவ்ள், மலைமகள், அந்த குண்டலியின் ரூபமான நாக வாகனத்தில் எழுந்தருளி அருள் சுரக்கின்றாள்.

இன்று அன்னை சொர்ணாம்பிகையை மரகதவல்லியாக துதிக்கின்றோம்.


மரகதம்

மடியாய் மாளும் வகை தந்து
மயலார் நீங்குந் தன்மை தந்தாய்
மதங்கொள் வேகங் கெடுத்தாளும்
மன்னோர் மறையே மாதவமே


மிடியார் மாளும் நிலை தந்து
மிகைகொள் அச்சம் போக்கியருள்
மிளிரும் வண்ண மலர்ப்பாதம்
மின்னேர் மணியே மரகதமே


துடியார் தையால் துரியத்தே
துணையாய் தோன்றும் தண்ணளியே
துதிசெய் நெஞ்சந் திகழ்கின்றாய்
தொன்னேர் நெறி கொள் தோத்திரத்தாய்


அடியார் ஆரூர்க் கமலாட்சி
அறங்கூர்ச் சைதைப் பொற்கொடியே
அடிமை கொண்டாய் அருள்வாமி
அன்னாய் சிவசொர் ணாம்பிகையே. (4)




நாகம் விநாயகருக்கு உதர பந்தனம் என்னும் அரைஞாண்க் கயிறு, அதுவே எம்பெருமான் திருக்கயிலை நாதருக்கு ஆபரணங்கள், திருமாலுக்கு பள்ளி கொள்ளூம் படுக்கை, அம்பிகைக்கு குடை மற்றும் மோதிரம் என்றும் பார்த்தோம். முருகருடைய மயிலின் கால்பந்தனம். மூலாதாரத்தில் உறங்கிக் கொண்டிருக்கும் குண்டலினி சக்தி பாம்பு வடிவில் இருக்கும். குண்டலினி சக்தியாக இருந்து மனிதனின் உறங்கும் ஆற்றலை மேல் நிலைக்கு உயர்த்துவதை உணர்த்துவதே நாக வாகனம்.


ஆதி சங்கர பகவத் பாதாள் அன்னையின் மகிமையைக் கூற வரும் போது அமிர்தம் உண்ட தேவர்கள் அனைவரும் மாண்டனர், ஆனால் பகவதீ, உன்னுடைய கணவரான சிவபெருமான் ஆலகால விஷத்தை உண்டும் ஒன்றும் இல்லாமல் இருக்கின்றார் அது உனது மகிமை என்று பாடுகின்றார்.

பாம்புகள் எப்படி ஐயனின் ஆபரணங்கள் ஆயின என்று தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளதா அன்பர்களே? சரி வாருங்கள் தாருகா வனம் செல்வோம். ஐயன் பிக்ஷாடணராகவும், மஹா விஷ்ணு மோகினியாகவும் இறுமாந்திருந்த முனிவர்களின் கர்வத்தை அடக்க சென்றனர். முனி பத்தினிகள் தம் வயம் இழந்து சுந்தரின் பின்னர் ஒடினர். முனிவர்களும் மோகினியின் பின் மையல் கொண்டு தாங்கள் எந்த கர்மத்தின் மேல் கர்வம் கொண்டிருந்தனரோ அந்த கர்மாவை மறந்தனர். பின்னர் புத்தி தெளிந்து தங்களை மயக்கிய மோகினியையும், சுந்தரரையும் அழிக்க அபிசார வேள்வி செய்து பலவற்றை அனுப்பினர் அவைகளில் கொடிய விஷமுள்ள பாம்புகளை அதன் விஷத்தன்மையை நீக்கி ஆபரணாங்களாக அணிந்து ஆனந்த தாண்டவம் ஆடி அருளினார் அம்பலக் கூத்தர்.
நாகமும், மத்தமும், மதியும், நதியும் சூடும் எம்பெருமான். திருக்கயிலாய மலையில் வடக்கு முகத்தில் நாகக் குடையை தரிசனம் செய்யலாம்.

பதஞ்சலி முனிவராக அவதாரம் செய்து ஐயனின் ஆன்ந்த தாண்டவத்தை முதலில் தரிசனம் செய்த ஆதி சேஷன வாகன சேவையை கண்டு மகிழுங்கள்.

இந்திரியங்களை வெல்ல முடியாதவன் இந்திரன், அவற்றை முழுவதும் வென்று யோகிகளுக்கெல்லாம் தலைவராக மஹா யோகியாக திகழ்வதால் சிவ பெருமான் ருத்ரன் என்று அழைக்கப்படுகின்றார்.

இங்கே யோகத்தில் அமர்ந்த மஹா யோகியாக, அன்று நால்வருக்கும் சொல்லாமல் சொல்லி உண்மைப் பொருளை உணர்த்திய ஆதி குரு தக்ஷிணா மூர்த்தியாய் ஆதி சேஷனில் சேவை சாதிக்கின்றார் காரணீஸ்வரர்.

படத்தை பெரிதாக்கிப் பார்த்தால் ஐயன் கையில் உள்ள கடிகாரம், ஜடாமுடியில் உள்ள நாகம், கழுத்தில் தொங்கும் நாகம், கங்கை ஆகியவற்றைத் தெளிவாக காணலாம். அம்மையின் ஜடை அலங்காரமும் அருமையோ அருமை.





சித்திரைப் பெருவிழாவின் நான்காம் நாள் காலை ஆதொண்ட சக்ரவர்த்தி வழிபட்ட காரணி மேகம் போல் அருள் பொழியும் காரணீஸ்வரப் பெருமான் புருஷா மிருக வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா வந்து கோவிலினுள் வந்து வழிபட முடியாதாவர்களுக்கும் தானே அவர்கள் இல்லத்தின் முன் வந்து தரிசனம் தந்து அருள் பாலிக்கின்றார். அதனால் தானே அவரை பரம கருணா மூர்த்தி என்று போற்றிப் பரவுகின்றோம்


புருஷா மிருக வாகனம்

நான்காம் நாள் உற்சவத்தின் தாத்பர்யம்: நம்முடைய வாழ்க்கை மனம், புத்தி, சித்தம்,அகங்காரம் என்னும் நான்கு கருவிகளினால் (கரணம்) இயக்கப்படுகின்றன. கரணம் என்ற சொல்லுக்கு விருப்பம் என்ற பொருளும் உண்டு. விரும்பியபடி புத்தி செல்லும், புத்தி சித்தத்தை மாற்றும், அது தான் என்ற அகங்காரத்தை தோற்றுவித்து நம்மை அழிவிற்கு அழைத்து செல்லும். எனவே மனம் புத்தி ஆகியவை நல்ல முறையில் இயங்கி சித்தம் போக்கு சிவன் போக்ககாக இருக்க அதாவது எப்போதும் அவர் நினைவாகவே இருக்க பிரார்த்தனை செய்ய வேண்டும். இவ்வாறு சிவ சிந்தனையில் ஈடுபட்டால் அகங்காரம் நீங்கும். சீவனில் உள்ள அகங்காரமாகிய கொம்பு நீங்கினால் சிவன் ஆகலாம்.

மொத்தம் 84 இலட்சம் யோனி பேதம் அவை அனைத்தும் இந்த நான்கின் மூலமே உருவாகின்றன. அவையாவன வியர்வை, கிழங்கு, விதை, மற்றும் கருப்பை. இவ்வாறு நான்கு வழிகளிலும் பிறவி வேண்டாம் உன் தாளடி நிழலில் வாழ்ந்தாலே போதும் என்று வேண்டுவதே நான்காம் திருநாள்.

1 comment:

Anonymous said...

திருவடி தீக்ஷை(Self realization)
இந்த வீடியோவை முழுமையாக பாருங்கள். இது அனைவருக்கும் தேவையானது.நாம் நிலையிள்ளத உடம்பு மனதை "நான்" என்று நம்பி இருக்கிறோம். சிவசெல்வராஜ் அய்யாவின் உரையை முழுமையாக கேட்கவும்.



Please follow

(First 2 mins audio may not be clear... sorry for that)
http://www.youtube.com/watch?v=y70Kw9Cz8kk (PART-1)
http://www.youtube.com/watch?v=XCAogxgG_G4(PART-2)
http://www.youtube.com/watch?v=FOF51gv5uCo (PART-3)

Online Books(Tamil- சாகாகல்வி )
http://www.vallalyaar.com/?p=409


Contact guru :
Shiva Selvaraj,
Samarasa Sutha Sanmarkka Sathya Sangam,
17/49p, “Thanga Jothi “,
Kalaignar kudi-iruppu – Madhavapuram,
Kanyakumari – 629702.
Cell : 92451 53454