Thursday, June 25, 2009

அங்காள பரமேஸ்வரியின் மஹா கும்பாபிஷேகம் -3

மனிதரும் தேவரும் மாயாமுனிவரும் வந்து சென்னி குனிதரும் சேவடி கோமளவல்லிக்கு முதற்கால யாக பூஜை

விநாயகர் மற்றும் பால முருகன் கும்பங்கள்


விமான கலச கும்பங்கள்

யாக சாலையில் அங்காள பரமேஸ்வரியம்மன் கும்ப ரூபத்தில்
பூரண அலங்காரத்தில் பொலிவுடன் விளங்கும் அழகைக் காணுங்கள்.


யாக சாலையின் நான்கு வாயில்களே நான்கு யுகங்கள் எனவே ஒவ்வொரு கால பூஜையிலும் முதலில் விக்னேஸ்வர பூஜை நடைபெறுகின்றது பின் நான்கு துவாரங்களுக்கும் பூஜை நடைபெறுகின்றது. துவார பூஜைக்குப்பின் வேதிகார்ச்சனை. பின்னர் நான்கு யாக குண்டங்களிலும் அக்னி விபாஜனம் ஆகி முதல் கால யாகம் நடைபெற்றது.

யாகத்தின் போது பல திரவியங்கள் யாகத்தீயில் இடப்படுகின்றன. அவற்றினால் உண்டாகும் புகை நமது உடலின் பல நோய்களை தீர்க்கவல்லன ஆகவே தான் கும்பாபிஷேக காலத்தில் கலந்து கொள்வது மிகவும் நல்லது. முதற்கால பூஜையின் நிறைவாக தீபாரதணை நடைபெற்றது.

யாக சாலையில் உற்சவர் அம்மன்.

உற்சவர் அம்மனை பற்றி கூறும் போது ஒன்றை கூறாமல் இருக்க முடியாது. 70களில் நடந்த சம்பவம். கிராமத்துக் கோவில் என்பதால் அதிக பாதுகாப்புக் கிடையாது. உற்சவ அம்மன் மூர்த்தி சிறிது தான் ஆனால் அம்மையின் கீர்த்தி பெரிது. அம்மையின் அழகை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை, இடக்காலை மடக்கி வலக்காலை தொங்க விட்டு வீராசனத்தில் நான்கு கரங்களில், சூலம், கபாலம், உடுக்கை, பாசம் தாங்கி அக்னி ஜுவாலையுடன், திருவாசியில் உள்ள கோலங்கலும், ஓம் என்னும் பிரணவமும், ஐந்து தலை நாகம் குடைப் பிடிக்க மிகவும் எழிலாக வீற்றிருக்கும் அம்மையின் அழகை நேரில் காண்கின்றீர்கள். ஒரு பக்கம் இருந்து பார்த்தால் அன்னை உக்ர ரூபிணியாய் காட்சி தருவாள் அந்த ஆதி பராசக்தி அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகி. அதே நாம் மனக் கனிந்து தாயே நான் உன் பிள்ளையல்லாவா? லோக மாதாவே என்று பார்த்தால் அப்படியே சாந்த சொரூபியாக காட்சி தருவாள் அன்னை திரிபுர சுந்தரி இராஜ ராஜேஸ்வரி இவ்வாறு ரௌத்ரமும் சௌந்தர்யமும் இனைந்த மூர்த்தம் அன்னை அங்காள பரமேஸ்வரி.

அன்னையின் அழகில் மயங்கிய சில துஷ்டர்கள் அந்த லோக மாதாவையே திருட முயற்சி செய்துள்ளனர். அம்மை தன்னை கோவிலிருந்து வெளியே எடுத்துச்செல்ல அனுமதித்தாள், திருடர்களும் மனம் மகிழ்ச்சி கொண்டு கோவிலின் வெளியே சென்றனர். அங்கு தான் அன்னை தன் சக்தியை அவர்களுக்கு காண்பித்தாள் அக்னி ஜுவாலையையே மகுடமாக கொண்ட அந்த அங்காள பரமேஸ்வரி, ஆதி சக்தி தீப்போல தகித்தாளோ? அல்லது ஒன்றாய் அரும்பி பலவாய் விரிந்த அம்மை எவ்வாறு கனந்தாலோ? அல்லது அவர்கள் முன் தன் நாக ரூபத்தைக் காட்டி மிரட்டினாளோ? என்ன சோதனை கொடுத்தாள் என்று தெரியவில்லை, துஷ்டர்களை கருவறுக்கும் அம்மனின், துர்கா தேவியின், காளியின் உக்கிரம் தாங்க முடியாமல் , அன்னையை திருடிய அந்த கயவர்களால் அப்படியே அருகில் இருந்த வேலியில் அம்மனைப் போட்டு விட்டு ஓடி விட்டனர். அடுத்த நாள் காலை பூசை செய்ய வந்த பூசாரி, உற்சவ அம்மனைக் காணாது திகைத்தார். அம்மை தன் இருந்த இடத்தை உணர்த்த கோவிலை சுற்றி தேடிய போது வேலியில் அன்னை கிடைத்தாள். இது தாய் நடத்திய ஒரு திருவிளையாடல்.

யாக பீடத்தில் அம்மன்


முதற்கால யாக பூஜை முடிந்து தீபாராதனை


முதற்கால யாக பூஜையை தரிசனம் செய்வதால் ஞானம் சித்திக்கும் என்பது ஐதீகம்.

***********

இம்மையிலும் இன்பம் சேர்க்கும் இறைவிக்கு இரண்டாம் கால யாக பூஜை

எந்த மனிதனுக்கும் மூன்று வித கடன்கள் உள்ளன அவையாவன தங்களுடைய மூதாதையர்களுக்கு செலுத்த வேண்டிய பித்ரு கடன், ரிஷிகளுக்கு செலுத்த வேண்டிய ரிஷி கடன், மூன்றாவது தேவர்களுக்கு செலுத்த வேண்டிய தேவ கடன், குல மக்கள் சார்பாகவும், கிராம மக்கள் அனைவருக்காவும் சிவாச்சாரியார்கள், இரண்டாம் கால யாக பூஜைக்கு பூர்வாங்கமாக இம்மூன்று கடன் தீர்க்கும் சடங்குகளை செய்கின்றனர்.

தாங்கள் காண்பது பிம்ப சுத்தி எனப்படும் புதிதாக பிரதிஷ்டை செய்யப்படும், பால முருகன் விக்ரகம், பலி பீடம் மற்றும் விமான கலசங்கள் ஆகியவற்றிக்கு முதலில் அபிஷேகம் நடைபெற்று பின் பூஜைகள் நடைபெற்று நூதன ஸ்தூபி ஸ்தாபனம் என்னும் கலசங்கள் விமானத்தில் பிரதிஷ்டை செய்யப்படும் நிகழ்ச்சி நடைபெற்றது.



சயனாபிஷேகம் கண்டருளுகின்றார் புதிதாக பிரதிஷ்டை செய்யப்படவுள்ள பால முருகன்.

இரண்டாம் நாள் காலை விமானத்தில் உள்ள அம்மன் கண் திறப்பு நிகழ்ச்சியும் ஸ்தபதிகளுக்கு மரியாதை செய்யும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. பின் வேத பாராயணம், தேவார திருவாசக பாராயணம், முடிந்து தீபாராதணையும் அ்தைத் தொடர்ந்து உபசாரங்களும் சிறப்பாக நடைபெற்றது.

இரண்டாம் கால யாக பூஜையை தரிசனம் செய்வதால் வைராக்கியம் சித்திக்கும் என்பது ஐதீகம்.




அடுத்த பதிவில் மூன்றாம் கால யாக பூஜை மற்றும் லலிதா சகஸ்ரநாம அர்ச்சனை காட்சிகளைக் காணலாம் அன்பர்களே.

மஹா கும்பாபிஷேக காட்சிகள் தொடரும்...........

No comments: