Saturday, February 25, 2012

இமயமலையில் ஒரு இனிய யாத்திரை -20



கங்கா மாதா விழா

"கோமுகி' இமயத்தின் ஏற்றத்தைப் போற்றுகிற கவின்மிகு இடமாகும். கோமுகியிலிருந்து ஆடிப்பாடி, பிரவாகித்து ஓடி, கங்கோத்ரியின் வழியாக பாய்ந்து வரும் அம்மா பாகீரதி  நதி,  தேவப் பிரயாகை, கேதாரிநாத், பத்ரிநாத் தலங்களின் சமீபமாக உற்பத்தியாகிற மந்தாகினி, அலகநந்தா நதிகளுடன் இணைகிற காட்சி இமயமலையின் இயற்கை காட்சியின் மாட்சியாகும் பின்னர்  ரிஷிகேசமாகப் பிரகாசிக்கிறதைக் கண்டு ரசிக்கவேண்டும். இமயத்தில் பிறந்த கங்கை பூமியைத் தொடுமிடம்தான் ஹரித்வாரம். இப்பயணத்தில் இந்த இடங்களில் சிலவற்றை அவனருளால்  தரிசனம் செய்து விட்டு மிகவும் களைத்துப்போய் ரிஷிகேசம் திருக்கோவிலூர் மடத்தில் 17-09-10 அன்று காலை எழுந்தோம்.

கங்கை மலைப்பிரதேசத்தில் பாயும் கடைசி நகரம் ரிஷிகேசம்,

எண்ணற்ற திருகோவில்கள், மடங்கள், ஆசிரமங்கள், ஸ்நான கட்டங்கள் நிறைந்த நகரம்.

சார்தாம் யாத்திரை அதாவது இமயமலை பயணத்திற்கு இந்நகரம்தான் நுழைவு வாயில்.

 மஹாவிஷ்ணு மது கைடபரை அழித்த இடம் ரிஷிகேசம்.

மூன்றுபக்கமும் மலைகளால் சூழப்பெற்று கங்கையின் கரையில் அமைந்துள்ளது இந்த புண்ணிய நகரம்.

புராதன காலத்தில் இருந்தே மகான்களையும், ரிஷிகளையும் ஈர்த்து வந்த பகுதி. இந்நகரத்தின் ஒரு பகுதி முனி-கா-ரேதி அதாவது முனிவர்கள் பாதம் பட்ட மண் என்று அழைக்கப்படுகின்றது.

இராமர், இலக்ஷ்மணன், பரதன் மட்டுமல்ல இராமானுஜரும், ஆதி சங்கரரும் கூட தவம் செய்த புண்ணீய பூமி பவித்ர பூமி இது. 

முக்திதாயினி கங்கைக்கு பூஜை

அன்றைய தினம் மாலை ஹரித்வாரில் இருந்து சதாப்தி விரைவு வண்டியில் டெல்லிக்கு பதிவு செய்திருந்தோம் எனவே காலை நேரத்தை ரிஷிகேசத்தை சுற்றிப்பார்த்து விட்டு, மதிய உணவிற்குப்பின் ஹரித்வார் சென்று  ஹரி-கா-பௌரியில் புனித கங்கா தீர்த்தம் சேகரித்துக்கொண்டு இரயில் ஏறி விடலாம் என்று முடிவு செய்தோம்.

எங்கள் குழுவில் சரளமாக ஹிந்தி பேச தெரிந்தவர்கள் இருவர். முதலாவது தனுஷ்கோடி அவர்கள், இரண்டாவது அடியேன், எங்கள் அலுவலகம் டேராடூனில் இருப்பதாலும் அடியேன் இவ்விரு இடங்களை முதலிலேயே சுற்றிப் பார்த்திருந்ததாலும், அடியேன் தேவேந்திரனை அழைத்துக்கொண்டு மருத்துவமனை செல்வதென்றும், தனுஷ்கோடி  அவர்கள் மற்றவர்களை அழைத்துக்கொண்டு ஹரித்வாரை சுற்றிபார்க்க செல்வதென்றும் முடிவு செய்தோம்.

திராவிட பாணியில் கௌரி கங்கா உடனுறை
 சந்திர மௌலீஸ்வரர் ஆலயம்

அதற்கு முன்னால் வைத்தி அண்ணன் அவர்கள் கேதாரீஸ்வரர்ருக்கு அபிஷேகம் செய்வதற்காக திருநீறு, சந்தனம் முதலியவற்றை சிதம்பரத்திலிருந்து கொண்டு வந்திருந்தார் அவற்றை திருப்பி எடுத்து செல்ல விருப்பமில்லை  எனவே இங்கே எங்காவது சிவன் கோவிலில்  அபிஷேகம் செய்து விடலாம் என்று கூறினார். நாங்கள் தங்கியிருந்த திருக்கோவலூர் மடத்தின் அருகிலேயே திருமலை-திருப்பதி தேவஸ்தானத்தின் திருவேங்கடவன் திருக்கோவிலும்,  கௌரி கங்கா உடனுறை சந்திர மௌலீஸ்வரர் ஆலயமும் உள்ளது அதில் சிவன் கோவிலில் சென்று பார்ப்போம் முடிந்தால் அபிஷேகம் செய்து விடலாம் என்று திராவிட  பாணியில் திருப்பதி தேவஸ்தானத்தாரல் கட்டப்பட்டுள்ள அத்திருக்கோவிலுக்கு சென்றோம்.

 காலையிலேயே அபிஷேகம் முடித்து அலங்காரம் செய்து விட்டிருந்தனர் எனவே ஏமாற்றத்துடன், வேங்கடேஸ்வரர் கோவிலுக்கு சென்றோம் அங்கு பெருமாளுக்கு திருமஞ்சனம் நடந்து கொண்டிருந்தது அதை சேவித்தோம்.  இந்த திருக்கோவில்களளின் அருகில்  திருப்பதி தேவஸ்தானத்தின் தங்கும் விடுதி உள்ளது, யாத்திரிகள் இங்கும் தங்கலாம், அருகில் ஒரு தென்னிந்திய உணவு விடுதியும் அருகில் உள்ளது.  காலை சிற்றுண்டியை அங்கு முடித்தோம். அடியேன் டேராடூனில் உள்ள எங்கள் அலுவலக மருத்துவரிடம் பேசி, ரிஷிகேசில் உள்ள நிர்மல் மருத்துவமனை நல்ல மருத்துவமனை என்று தேவேந்திரனை அங்கு அழைத்து சென்றேன். அவர்களும் அவரை பரிசோதித்து  விட்டு, உடனடியாக குளுகோஸ் ஏற்ற வேண்டும் அதனுடன் மருந்துகளும் தருகின்றோம் அவர் பயணத்திற்கு தயாராகி  விடுவார், கவலைப்பட ஒன்றும் இல்லை என்று கூறினார்கள் மதியம் இரண்டு மணியளவில் நாங்கள் ரிஷிகேசை விட்டு கிளம்பவேண்டும் என்று கூறினேன் அவர்களும் அதற்குள் மூன்று பாட்டில் குளுகோஸ் ஏற்றி விடலாம் என்று கூறினார்கள். எனவே அவரை அங்கு சேர்த்து அவருடன் நான் இருந்தேன். 
 லக்ஷ்மண் ஜூலா அருகே எங்கள் குழுவினர்
 

மற்றவர்கள் ரிஷிகேசத்தில் சுற்றிப்பார்க்க வேண்டிய, லஷ்மண் ஜூலா என்று அழைக்கப்படும் பழைய பாலம்,  கங்கையின் குறுக்கே கட்டப்படுள்ள இந்த பாலம் கட்டப்ட்டுள்ள இந்த இடத்தில் இலக்ஷ்மணன் தவம் செய்ததாக ஐதீகம்.  இப்பாலத்தை இலக்குவன் தனது அம்புகளால் அமைத்தாராம். ஜூலா என்றால் ஊஞ்சல் என்று பொருள், தொங்கும் பாலம் ஆதலால் இதில் நடந்து செல்லும் போது பாலம் ஆடுவதால் இப்பெயர்.    ராம் ஜூலா என்று அழைக்கப்படும் புதிய பாலம் தற்போது கட்டப்பட்டது.
 13 மாடிக்கோயில் 


ஆதி சங்கரால் கட்டப்பட்ட  பாரத் மாதா மந்திர் பரபரப்பான கடைவீதியில் அமைந்துள்ளது. பரதன் இங்கு தவம் செய்ததாக ஐதீகம். இங்குள்ள ஆஸ்ரமங்களில் சுவாமி பரமார்த்த நிகேதன்  ஆசிரமம் மிகவும் புகழ் பெற்றது. தினமும் மாலை கங்கை ஆற்றின் நடுவில் அமைக்கப்பட்டுள்ள  யோக நிஷ்டையில் அமர்ந்த கோலத்தில் அமைத்துள்ள சிவபெருமான் சிலைக்கு எதிரே இந்த ஆசிரமத்தின் சிறார்கள் வேதம் ஓத,  ஹோமம் நடைபெற்று அந்தி சாயும் நேரத்தில் கங்கா ஆரத்தி தினமும் சிறப்பாக நடைபெறுகின்றது. 13 மாடி கோயிலும் பார்க்க வேண்டிய  ஒரு முக்கியமான இடம் ஆகும். எல்லா தெய்வ மூர்த்தங்களையும் நாம் இந்த கோயிலில் காணலாம். 


 ரிஷிகேசத்திலிருந்து சுமார் 7 கி.மீ தூரத்தில் நீலகண்டர் ஆலயம் அமைந்துள்ளது. வாகனத்திலும், நடைப்பயணமாகவும் இத்திருக்கோவிலை அடையலாம். சிரவண (ஆடி) மாதத்தில் ஆயிரக்கணக்கானோர் கங்கா தீர்த்தத்தை காவடியாக சுமந்து வந்து சிவபெருமானுக்கு இங்கு அபிஷேகம் செய்கின்றனர்.   

த்ரிவேணி கட்டத்தில் கங்கை பூமியில் இறங்கும் சிற்பம்

 த்ரிவேணி படித்துறையில் கீதாபோதேச  சிற்பம்
ரிஷிகேசில் அமைந்துள்ள படித்துறைகளில் திரிவேணி காட் என்னும் ஸ்நான கட்டம் மிகவும் சிறப்பு வாய்ந்தது, இங்குதான் லோக கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று நதிகளும் கலப்பதாக ஐதீகம். ஹரித்துவாரில் ஹரி-கா-பௌரிக்கு எவ்வளவு முக்கியத்துவம் உண்டோ அத்தனை முக்கியத்துவம் இதற்கும் உண்டு. இதன் அருகில் இரகுநாத் மந்திர் முதலிய பல ஆலயங்கள் உள்ளன, கரையில் பல அற்புத சுதை சிற்பங்கள் அமைந்துள்ளன. மாலை இங்கு நடக்கும் ஆர்த்தி மிகவும் சிறப்பு வாய்ந்தது. மேலும் லக்ஷ்மண் ஜுலா செல்லும் வழியில் உள்ள குருத்வாராவும் பார்க்கவேண்டிய இடம்.   இந்த ஊரில் யாரும் மாமிசம் சாப்பிடுவதில்லை ஒரு சிறப்பு. கீதா பவனில் எல்லா சமய நூல்களும் கிட்டும். இவ்வளவு சிறப்பு வாய்ந்த நகரில் முடிந்த இடங்களை சுற்றிப்பார்த்து விட்டு திரும்பி வந்த பின், வைத்தி அண்ணன் மற்றும் தனுஷ்கோடி ஆகியோர் மருத்துவமனை வந்தனர் அவர்களை அழைத்துக்கொண்டு சந்திரேஸ்வரர் ஆல்யத்திற்கு சென்றோம்.

சிவபெருமான் உறையும் இடம் மயானம் அல்லவா?   இந்த ரிஷிகேசில் சந்திரேசர் மயானத்தின் அருகிலேயே கோயில் கொண்டுள்ளார்.  அங்கு சென்ற போது ஒரு தடவை நாகம் வந்து இவரை வழிபட்டு சென்றிருக்கிறது என்பதை அறிந்தோம். அங்கிருந்த சிவாச்சாரியார் பஞ்சாமிர்தம், பால், தயிர், தேன், பன்னீர் எல்லாம் வாங்கி வந்து பழங்கள் அர்ப்பணித்து விதிப்பிரகாரம் ஒரு ருத்ராபிஷேகத்தை செய்து கொடுத்தார். சந்திரேஸ்வரரிடம் அடுத்த தடவையாவது தங்கள் ஜோதிர்லிங்க தரிசனம் சித்திக்கவேண்டும் என்று  மனமார வேண்டிக்கொண்டோம். ருத்ராபிஷேகம் செய்ததில் வைத்தி அண்ணனுக்கு மிகவும் திருப்தியாக இருந்தது. பின்னர் மருத்துவமனை வந்தோம். ரிஷிகேசில் ஆட்டோக்கள் கிடைக்கின்றன நம் ஊர் போல பணம் பிடுங்குவதில்லை, நியாயமான கட்டணமே வசூலிக்கின்றனர், எந்த இடமானாலும் வருகின்றனர். குளுகோஸ் ஏற்றிய பின் தேவேந்திரன் தெளிவாகி விட்டார். அவரை  மருத்துவமனையிலிருந்து விடுவித்து  பின்னர் திருக்கோவலூர் மடம் வந்து அனைவரும் ரிஷிகேசிலிருந்து ஹரித்வாருக்கு ஆட்டோவில் புறப்பட்டு வந்தோம்.

 முதலில் எங்களுடைய உடமைகளை புகைவண்டி நிலையத்தில்  வைத்து விட்டு  இரண்டு பேர் அதற்கு காவலாக இருக்க மற்றவர்கள்  ஹரி-கா-பௌரி சென்று  அமிர்தம் விழுந்த இடத்தில் நீராடி கங்கா தீர்த்தம்  எடுத்துக்கொண்டு வந்தோம். வைத்தி அண்ணன் அடுத்து சிதம்பரம் நடராசர் மஹா அபிஷேகத்திற்காக கங்கா தீர்த்தம் எடுத்துக்கொண்டார், கீழிருந்தே மானஸா தேவியை வணங்கி விட்டு புகைவண்டி நிலையத்திற்கு கிளம்பினோம். 

 மலை மேல் மானசா தேவி ஆலயம்

அப்போது மழை பெய்ய ஆரம்பித்தது எனவே அனைவரும் நனைந்து கொண்டே புகைவண்டி நிலையம் வந்து சேர்ந்தோம். சிறிது நேரத்தில் சதாப்தி  எக்ஸ்பிரஸ் வண்டியும் வந்தது, குறிப்பிட்ட நேரத்திற்கு எங்களை கொண்டு வந்து சேர்த்ததற்கு அந்த இறைவனுக்கு நன்றி தெரிவித்து, வண்டி ஏறி புதுடெல்லி வந்து சேர்ந்தோம் அங்கு ரயில் நிலையத்தின் அருகிலேயே உள்ள ஒரு ஹோட்டலில் தனுஷ்கோடி அவர்கள் அறைகள் முன் பதிவு செய்திருந்தார் அதில் தங்கினோம்.


 
  டெல்லியில் ஒரு நாள்


யாத்திரையின்  கடைநாள் 18-09-2010 அன்று டெல்லியில் சாந்தினி சௌக்கிற்கு மெட்ரோ இரயில் மூலம் சென்று சாப்பிங் செய்து கொண்டு  திரும்பி வந்து இரவு 7:10 Spicejet விமானம் மூலம் சென்னை வந்து சேர்ந்தோம். 13 நாட்கள் ஒரு குடும்பமாக புண்ணிய தேவபூமியில் பல் வேறு தெய்வங்களை தரிசித்த மக்கிழ்ச்சியில் அவரவர்கள் இல்லம் வந்தடைந்தோம்.   பின்னர் தெரிய வந்தது நாங்கள் ஹரித்வாரிலிருந்து வந்ததற்கு அடுத்த நாள் கங்கையில் வெள்ளம் வந்து ஹரி-கா-பௌரி எல்லாம் வெள்ளக்காடாகி விட்டதாம். அப்போது பெய்த மழையால் யாத்திரிகள் மூன்று நாட்கள் வரை பல்வேறு இடங்களில் மாட்டிக்கொண்டார்களாம்.

பாம்பு போல வளைந்து நெளிந்து செல்லும் மலைப்பாதையில் பஸ் பயணம், கொண்டை ஊசி வளைவுகள், பச்சை போர்வை போர்த்திய மலைகள்,  மேகக் கூட்டங்கள், பனி மூடிய சிகரங்கள்,       உசியிலைக் காடுகள், மாசடையாத தூய காற்று, சுடு நீர் ஊற்றுகள் கடுமையாக உழைக்கும் மக்கள், அற்புதமாக மலர்ந்திருக்கும் மலர்கள் என்று பல்வேறு அருமையான அனுபவம் பெற்றோம் இந்த 13 நாட்களில். பருவம் தவறிய மழை மற்றும் அதனால் ஏற்பட்ட நிலச்சரிவுகள் மட்டும் இல்லாமல் இருந்திருந்தால்  யாத்திரை இன்னும் அருமையாக, இனிமையானதாக இருந்திருக்கும். ஒருவர் உடல் நலம் சரியைல்லாமல் போனதால் சிறிது பின்னடைவு ஏற்பட்டது உண்மை. இல்லாவிட்டால் கேதாரீஸ்வரரை முதல் முறையிலேயே தரிசனம் செய்திருக்கலாமோ?  

என்னடா இவ்வளவு இன்னல்களை அனுபவித்திருக்கின்றீர்கள் ஆனால் தலைப்பில் இமயமலையில் ஒரு இனிய யாத்திரை என்று தலைப்புக்கொடுத்துள்ளிர்களே என்று யாருக்காவது தோன்றியிருக்கலாம். மஹாகவி பாரதி தனது நந்தலாலா பாடலில் 

“தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா

நின்னை தீண்டும் இன்பம் தோன்றுதையே நந்தலாலா”

என்று பாடியபடி எல்லா நிகழ்வுகளையும் அவன்  செயல் என்று எடுத்துக்கொண்டால் எதுவுமே ஒரு துன்பம் கிடையாது. அவன் தரிசனம் கிடைத்ததே அது தான் இன்பம் அது எங்களுக்கு முழுமையாக கிடைக்கவில்லை. மேலும் ஒரு சுற்றுலாவாக சென்றிருந்தால் துன்பமாக இருந்திருக்கும் யாத்திரையாக சென்றதால் நம்முடைய பக்தியில் எதோ குறை இருந்ததால் கேதாரீஸ்வரர் தரிசனம் கிட்டவில்லை என்பதுதான் உண்மை. திரு இரவி அவர்கள் நாம் சரியாக சிவபெருமானிடம் வேண்டிக்கொள்ளமல் விளையாட்டாக கிளம்பி வந்து விட்டோம் அடுத்த தடவை சரியாக பூஜை செய்து, சங்கலபம் செய்து கொண்டு வரிவோம் என்று கூறினார்.  இவ்வாறு முதல் வருட யாத்திரை நிறைவு பெற்றது.   

இனி எப்போது  கேதாரீஸ்வரரை தரிசனம் செய்து வைக்கப்போகின்றீர்கள்  என்று கேட்கின்றீர்களா? அதிகம் காத்திருக்க வேண்டாம் அடுத்த பதிவு வரை காத்திருங்கள். இது வரை உடன் வந்த அனைவருக்கும் மிக்க நன்றி.

Friday, February 17, 2012

இமயமலையில் ஒரு இனிய யாத்திரை -19

மலையின் மேலே மேலே செல்ல செல்ல விண்ணின் விளையாடல்களை கண்ணுறலாம் . ஜோதிர் மடம், விஷ்ணுப் பிரயாகை, கோவிந்த்காட், , ஹனுமத்சடடி வழியாக வந்து பத்ரிநாத் அடைந்து  பத்ரிநாதரின் அற்புதமான தரிசனம்  கண்ட மனமகிழ்ச்சியில்  பஞ்ச பத்ரி என்னும் ஐந்து தலங்கள் எங்கெங்குள்ளன என்று பார்ப்போமா அன்பர்களே?  பத்ரிநாதரை இப்போது நாம் தரிசித்த விஷால் பத்ரி, மற்றும் யோக பத்ரி, பவிஷ்ய பத்ரி, விருத்த பத்ரி, ஆதி பத்ரி ஆகிய தலங்களில் தரிசிக்கலாம். 


விஷால்  பத்ரி: பத்ரி விஷால் எனப்படும் நர நாராயண மலை சிகரங்களுக்கிடையில் அலக்நந்தாவின் கரையில் அமைந்துள்ள இந்த தலம் பத்ரிநாதரின் பிரதானத் தலமாகும், பூஜை நடைபெறும் போது பக்தர்கள்     “ஜெய் பத்ரி விஷால் கீ“ என்று கோஷம் எழுப்புகின்றனர்.

யோக த்யான் பத்ரி : ஜோஷிமட் பத்ரிநாத் - பஸ் மார்க்கத்தில், அலக்நந்தா நதிக்கரையில்  1920  மீ உயரத்தில் பாண்டு கேச்வரர்  புண்ய க்ஷேத்ரத்தில், பாண்டுவினால் நிர்மாணிக்கப்பட்ட யோக தியான மந்திர் அமைந்துள்ளது. பாண்டு மன்னர் தமது இறுதி காலத்தை இங்கேதான் கழித்தார். பாண்டாவ்ர்களும் தமது காலம் முடிந்த பிறகு இத்தலத்தில் இராஜ்ஜியத்தை பரிஷித்திற்கு ஒப்படைத்து விட்டு ஸ்வர்க்காரோஹணி எனப்படும் சொர்க்கத்திற்கான பயணத்தை இங்கிருந்து துவங்கினர்.      கோயில் கருவறையில் யோக த்யானத்தில் பகவான் தாமரை புஷ்பத்தில் அமர்ந்த நிலையில், அழகாக தரிசனம் அளிக்கிறார். இத்தலம் பத்ரிநாத்திலிருந்து 24 கி.மீ தூரத்திலும், ஜோஷிமட்டிலிருந்து 20  கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளது. 


பவிஷ்ய பத்ரி: ஜோஷிமட் - மலாரி பஸ் தடத்தில் 15கி.மீ. தொலைவில் தபோவன் உள்ளது. இங்கிருந்து 4கி.மீ. கால்நடையாகச் சென்று ஸுபாயீ கிராமத்தை அடையலாம். இங்கு சமுத்திர மட்டத்திலிருந்து 9,000அடி உயரத்தில் பவிஷ்ய பத்ரி கோயில் உள்ளது. அகஸ்திய முனிவர் இங்கு தவம் செய்ததாக புராண வரலாறு கூறுகிறது. இவருக்கு இங்கு ஸ்ரீமந்நாராயணன் தரிசனம் அளித்தார். அது சமயம் அவரிடம் கலியுகத்தில் தான் இங்கு கோயில் கொள்ளப்போவதாகக் கூறினார் என்று நம்பப்படுகிறது.  பவிஷ்ய என்றால் எதிர்காலம் அதாவது வருங்காலம் என்று பொருள் கொள்ளலாம்.    ஜய விஜயர்கள் என்ற இரு மலைகளுக்கு நடுவில் அலக்நந்தாவை கடந்து நாம் பத்ரிநாத்திற்கு செல்கின்றோம்.  ஜோஷிமட் நரசிங்க மூர்த்தியின் கை தேய்ந்து விழும் போது இந்த  ஜய விஜய மலைகள் (குதிரை மற்றும் யாணை மலைகள் - பார்ப்பதற்கு இவ்வாறு தோற்றம் அளிப்பதால் இப்பெயர்) இரண்டும் இணைந்து பத்ரி செல்லும் வழி அடைபட்டு விடும் அப்போது இந்த பவிஷ்ய பத்ரியில் பெருமாளை தரிசனம் செய்ய முடியும். தற்போது நரசிம்ம மூர்த்தியின் ஆலயம் இங்குள்ளது. 


விருத்த பத்ரி:  ஜோஷிர்மட் - பீபல்கோட் பஸ் சாலையில் ஜோஷிர்மட்டிலிருந்து 7 கி.மீ. தொலைவில் அனீமடம் என்று கூறப்படும் புராதனமான தீர்த்த ஸ்தலம் உள்ளது. அலக்நந்தாவின் அழகான பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது இந்த தலம், விருத்த என்றால் வயதான அதாவது பழைய என்று பொருள்  இது நாரத முனிவருக்கு மிகவும் விருப்பமான இடம். இங்குதான் நாரதர் தவம் செய்தார் என்பதும் அவருக்கு அங்கு ஸ்ரீமந்நாராயணன் தரிசனம் கொடுத்ததும் புராண வரலாறு.  நாரதர்தான் இந்தக் கோவிலுக்கு அடிகோலினார் என்றும், ஆதிசங்கராச்சாரியாரும் இங்கு பூஜைகள் செய்தார் என்றும் கூறப்படுகிறது. 

  

 

த்யான் பத்ரி :  பீபல்கோட் - ஜோஷிமடம் பஸ் மார்க்கத்தில் ஹெலாங் கிராமத்தின் பஸ் நிற்கும் இடத்தில் இருந்து 11கி.மீ. கால்நடையாகச் சென்று ஊர்கம் - கிராமத்தை அடையலாம். அங்கு ஊர்வா ரிஷியின் தபோபூமி உள்ளது. இங்கு உள்ள விஷ்ணு ஆலயத்தில்  சதுர் புஜங்களுடன் பத்ரிநாராயணன் தியானத்தில் அமர்ந்த நிலையில் தரிசனம் அளிக்கிறார்.


ஆதி பத்ரி:  சிலர் த்யான பத்ரி - யோக பத்ரி இரண்டையும் ஒரே க்ஷேத்திரமாகக் கூறுகிறார்கள். இவர்கள் ஆதிபத்ரி என்ற ஒரு க்ஷேத்திரத்தையும் கூறுகிறார்கள். கர்ண ப்ரயாக் க்ஷேத்திரத்திலிருந்து ராணிகேத் பஸ் மார்க்கத்தில் சிம்லீ கிராமம் உள்ளது. சிம்லீயிலிருந்து 11கி.மீ. நடைபயணமாக  ஆதி பத்ரி சென்றடையலாம்.

பஞ்சபத்ரிகளைப் பற்றி பார்த்தோம் இனி பஞ்ச ப்ரயாகைகளைப் பற்றிக்காணலாமா அன்பர்களே. ப்ரயாகை என்றால் சங்கமம் அதாவது கூடுதுறை என்று பொருள். இரண்டு நதிகள் கூடும் இடமே ப்ரயாகை. இமயமலையெங்கும் எண்ணற்ற சங்கமங்கள் உள்ளன அவற்றுள்  பரம பவித்ரமான அலக்ந்ந்தாவின் ஐந்து சங்கமங்களே இந்த   பஞ்ச ப்ரயாகைகள். இவையனைத்தும் பத்ரிநாத் செல்லும் பாதையில் அமைந்துள்ளன எனவே சார்தாம் யாத்திரை செல்லும் அன்பர்கள் இந்த பஞ்ச ப்ரயாகைகளில் புனித நீராடலாம், அவையாவன


1.விஷ்ணு ப்ரயாகை
2.நந்த ப்ரயாகை
3.கர்ண ப்ரயாகை
4.ருத்ர ப்ரயாகை
5.தேவ ப்ரயாகை

விஷ்ணு ப்ரயாகை: சதோபந்த ஏரியிலிருந்து  உற்பத்தியாகி வஸுதரா நீர் வீழ்ச்சியாகியாக விழுந்து ஒடி வரும்   அலக்நந்தா மானா கிராமத்தில் சரஸ்வதி நதியுடன்   கேசவ ப்ரயாகையில் கூடி பத்ரிநாதரின் பாதங்களை கழுவிக்கொண்டு ஓடி வருவதால் விஷ்ணு கங்கை என்னும் நாமத்துடன், தவுலிகிரியிலிருந்து  பாய்ந்து வரும் தவுலி கங்காவுடன் சங்கமம் ஆகின்றாள். இந்த சங்கமம் எனவே  விஷ்ணு ப்ரயாகை என்னும் பெயர் பெற்றது. நாரத முனிவர் இக்கூடுதுறையில்  தவம் செய்து மஹாவிஷ்ணுவின் தரிசனம் பெற்றார்.  இக்குடுதுறையில் எண்கோண விஷ்ணு ஆலயம் உள்ளது.  இதை கட்டியவர் இந்தோர் மஹாராணி அகல்யாபாய் ஆவார். விஷ்ணு குண்டம் மற்றும் காகபுஜண்டர் ஏரி அருகில் உள்ளன். ஜோஷிர்மட்டிலிருந்து 10 கி.மீ தூரத்தில் 1372 மீ உயரத்தில் விஷ்ணு ப்ரயாகை அமைந்துள்ளது. 

 
நந்த ப்ரயாகை : அடுத்த கூடுதுறை உலகின் மூன்றாவது உயர்ந்த சிகரமான நந்தாதேவியிலிருந்து ஓடி வரும் நந்தாகினியும், அலக்நந்தாவும் கூடும் சங்கமம் ஆகும். நந்தன் என்னும் மன்னன் யாகம்  செய்ததால் இவ்விடம் இப்பெயர் பெற்றது என்பர்.  மற்றொரு ஐதீகம் யாதவ ரத்தினம் நந்தகோபனும், யசோதையும். வசுதேவரும் தேவகியும் மஹா விஷ்ணு தங்கள் புத்திரனாக வர வேண்டும் என்று வேண்ட கிருஷ்ணாவதாரத்தில் இருவருக்கும் அருள  ஒருத்தி மகனாய் பிறந்து ஓரிரவில் ஒருத்தி மகனாய் ஒளித்து வளர்ந்தார்.    கர்ணபிரயாகையில் இருந்து 22 கி.மீ தூரத்தில் 914 அடி உயரத்தில் அமைந்துள்ளது நந்த ப்ரயாகை. கோபாலருக்கு ஒரு ஆலயம் இவ்விடத்தில் உள்ளது. ரூப் குண்ட்  நடைப்பயணம் செல்பவர்களை இங்கு அதிகம்  காணலாம்.  



கர்ண ப்ரயாகை: பிண்டாரி பனியாற்றிலிருந்து ஓடி வரும் பிண்டாரி நதியும் அலக்நந்தாவும் சங்கமம் ஆகும் இடம் கர்ணப்ரயாகை. மஹாபாரதத்து கர்ணனின் பெயரால் இந்த் கூடுதுறை இப்பெயர் பெற்றது. தங்களது மூத்த சகோதரன் கொடை வள்ளல்  கர்ணனுக்கு பாண்டவர்கள் பிண்டதானம் செய்த தலம். தானத்தினால் பெயர் பெற்ற கர்ணனிடம் பாண்டவர்கள் கடைசி ஆசை என்னவென்று கேட்க , எங்கு இறுதி கர்மம் நடைபெறவில்லையோ அங்கு தனக்கு இறுதி காரியம் நடைபெறவேண்டும் என்று கூற, இங்கு ஒரு இடம் கிட்ட அர்ச்சுனன் பாணம் விட பிண்டாரி உற்பத்தியாகி வந்தாள்.  இதன் கரையில் கர்ணனுக்கு ஒரு சிறு கோயில் உள்ளது. மறு கரையில் கிருஷ்ணருக்கும், சிவபெருமானுக்கும், துர்கா தேவிக்கும்  கோயில்கள் உள்ளன. கன்வ முனிவரின் ஆசிரமம் இங்குதான் இருந்திருக்கின்றது. துஷ்யந்தன் சகுந்தலை காதல் நாடகம் அரங்கேறியதும் இங்குதான். அதைத்தான் காளிதாசன் இயற்றிய அற்புத இலக்கியமாக இயற்றினார். விவேகானந்தர் இங்கு சில நாட்கள் தங்கியுள்ளார். இங்கிருந்து நைனிதால் மற்றும் இராணிகேத்திற்கு பாதை செல்கின்றது.

ருத்ர ப்ரயாகை: கேதார் சிகரங்களிலிருந்து பாய்ந்து வரும் மந்தாங்கினியும், அலக்நந்தாவும் கூடும் கூடுதுறை ருத்ர ப்ரயாகையாகும். இசையில் தன்னை வெல்ல வந்த  நாரத முனிவருக்கு சிவபெருமான் ருத்ரராக காட்சி கொடுத்த தலம். ராகங்களையும் ராகினிகளையும் சிவபெருமான் யாத்த தலம்.   சதி தேவி யாக குண்டத்தில் தக்ஷன் கொடுத்த உடலை தியாகம் செய்தபின் மலையரசன் பொற்பாவையாக, மலைமகளாக, கௌரியாக மீண்டும் பிறப்பெடுத்த தலம். அன்னை பர்வதவர்த்தினி தவமிருந்து சிவபெருமானை தனது கணவனாக அடைந்த தலம். ருத்ரநாத்ஜீக்கு இங்கு ஒரு ஆலயம் உள்ளது. இங்கிருந்து ஒரு பாதை மந்தாங்கினியின் கரையோரம் கேதார்நாத்திற்கும், மற்றொரு பாதை அலக்நந்தாவின் கரையோரம் பத்ரிநாத்திற்கும் செல்கின்றது. நாங்கள் தற்போது பயணம் செய்யும் பாதை இப்பாதைதான்.

தேவப்ரயாகை: கோமுக்கிலிருந்து ஓடிவரும் பாகீரதியும்,  வசுதாராவில் துவங்கி நரநாராயணர் சிகரம் தாண்டி பத்ரிநாதரின் பாதம்  கழுவ் ஓடிவரும் அலக்நந்தாவும் சங்கமமாகி கங்கையாக ஓடும் புண்ணிய தலம் இந்த தேவப்ரயாகை. இதன் கரையில் அமைந்துள்ள இரகுநாத்ஜீ ஆலயம்தான்   பெரியாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பெற்ற கண்டம் என்னும் கடிநகர் என்னும் திவ்யதேசம் ஆகும். இராமபிரான் இந்த கூடுதுறையில் தவம் செய்துள்ளார்.
  
இந்த பிரயாகைகளில் இப்பிரதேச மக்கள்  உத்தராயண புண்ணியகாலமான  மகர சங்கராந்தி, வசந்த பஞ்சமி, மஹா சிவராத்திரி, இராமநவமி ஆகிய புண்ணிய நாட்களில் புனித நீராடி தங்கள் பாவம் போக்குகின்றனர்.

இந்த பிரயாகைகள் நமக்கு ஒரு பாடத்தை உணர்த்துகின்றன. முதல் பிரயாகையில் தவுலியும் அலக்நந்தாவும் சங்கமம் ஆனால் அதற்குப்பின் தவுலி இல்லை அலக்நந்தாதான், அது போலவே இரண்டாவது சங்கமத்தில் நந்தாங்கினியும் அலக்நந்தாவும் இணைகின்றனர் அதற்குப்பின் நந்தாங்கினி இல்லை, மூன்றாவது பிரயாகைக்குப்பின் பிண்டாரி இல்லை, நான்காவது பிரயாகைக்குப்பின் மந்தாங்கினி இல்லை, ஐந்தாவது சங்கமத்திற்க்குப் பிறகு பாகீரதியும் இல்லை, அலக்நந்தாவும் இல்லை, கங்கையாக மாறுகின்றனர், இறுதியாக கடலில் கலந்தபின் கங்கையே இல்லை. அது போல ஜீவாத்மாக்களாகிய நாம் எண்ணற்ற நாமம் கொண்டாலும் அவையெல்லாம் இறுதியி பரமாத்மாவுடன் இணையும் போது மறைந்து போகும், ஆகவே நான் என்னும் ஆங்காரமும் எனது என்னும் மமகாரமும் இல்லாமல் வாழ வேண்டும் என்பதை இந்த ப்ரயாகைகள் நமக்கு உணர்த்துகின்றன.   

வழியெங்கும் இது போல நிலச்சரிவுகள் 


இனி நாங்கள் 16-09-11 அன்று  பீபல்கோட்டிலிருந்து ரிஷிகேஷ் வந்து சேர்ந்த கதையை கேளுங்கள். காலை 8 மணியளவில் பீபல் கோட்டிலிருந்து புறப்பட்டோம். முதலில்  கர்ணபிரயாகையை தரிசனம் செய்தோம். அன்று இரவே ஹரித்வார் அடைய வேண்டும் என்பதால் ப்ராயாகையில் நீராடவில்லை புனித நீரை தலையில் தெளித்துக் கொண்டு உடனே புறப்பட்டுவிட்டோம். அடுத்து ருத்ரபிரயாகையை வந்தடைந்தோம் அங்கும் ப்ரயாகையை தரிசனம் செய்து விட்டு, காலை சிற்றுண்டியை முடித்து விட்டுக்கிளம்பினோம். ஸ்ரீநகரில் ஒரு மருத்துவரைப்பார்த்து தேவேந்திரன் அவர்களுக்கு மருந்து வாங்கிக்கொண்டு ஹரித்வார் நோக்கிக் கிளம்பினோம்.  சிறிது தூரம்தான் சென்றிருப்போம் ஒரு பெரிய போக்குவரத்து நெரிசல் சுமார் ஆறு மணி நேரம் ஒரே இடத்தில் நின்றிருந்தோம்.

வழி சரியாக காத்திருக்கும் போது பத்ரிநாத்திலிருந்து ஹரித்வார் வரையான பாதையைப் பற்றிய விவரங்களை காணலாமா?

புறப்படும் இடம்
செல்லும் இடம்
தூரம் கி.மீ
உயரம் மீ
பத்ரிநாத்
தேவதர்ஷனி
2
3101
தேவதர்ஷனி
ஹனுமான்சட்டி
13
2286
ஹனுமான்சட்டி
பாண்டுகேஷ்வர்
9
1829
பாண்டுகேஷ்வர்
கோவிந்த்காட்
4
1829
கோவிந்த்காட்
விஷ்ணு ப்ரயாகை
10
1372
விஷ்ணு ப்ரயாகை
ஜோஷிமட்
10
1850
ஜோஷிமட்
ஹெலாங்
14
1524
ஹெலாங்
தங்கானி
6
1677
தங்கானி
கருட்கங்கா
6
1372
கருட்கங்கா
பீபல்கோடி
5
1311
பீபல்கோடி
பிராஹி
9
1100
பிராஹி
சமோலி
8
1069
சமோலி
நந்த ப்ரயாகை
10
914
நந்த ப்ரயாகை
கர்ணப்ரயாகை
22
795
கர்ணப்ரயாகை
கௌச்சார்
11
790
கௌச்சார்
கோல்டிர்
10
645
கோல்டிர்
ருத்ர ப்ரயாகை
34
610
ருத்ர ப்ரயாகை
ஸ்ரீநகர்
34
579
ஸ்ரீநகர்
தேவப்ரயாகை
35
472
தேவப்ரயாகை
ரிஷிகேசம்
70
340
ரிஷிகேசம்
ஹரித்வார்
24
250
 
வழியெங்கும் வண்ணத்துப் பூச்சிகள் 

இரு பக்கமும் வண்டிகள், நிலச்சரிவின் காரணமாக பாதை பல இடங்களில் ஒரு வழிப்பாதையாக மாறி விட்டிருந்ததால் மாற்றி மாற்றி இரு பக்க வண்டிகளையும் காவல் துறையினர் அனுப்பிக்கொண்டிருந்தனர். ஆகவே இந்த தாமதம். எண்ணற்ற சீக்கியர்களை இன்றைய தினம் கண்டோம். ஹேமகுண்ட் சாகிப் சென்று விட்டு திரும்பி வந்து கொண்டிருந்தனர். நாங்கள் நின்ற இடத்தில் இருந்த இயற்கை காட்சிகளை குறிப்பாக பட்டாம்பூச்சிகளை இரசித்த்துக்கொண்டிருந்தோம். முதலில் சிறிது நேரத்தில் முன்னே சென்று விடலாம் என்று நினைத்தோம், சமயம் ஆக ஆக எரிச்சலும், அதே சமயம் பதினெட்டாம் தேதியன்று டெல்லியிலிருந்து விமானம் செல்ல பதிவு செய்திருப்பதால், சரியான சமயத்திற்கு சென்று சேர்ந்து விட முடியுமா? என்ற கவலையும், தேவேந்திரன் அவர்களின் உடல் நிலை இன்னும் மோசமாகாமல் இருக்க வேண்டுமே என்ற கவலையும் சேர்ந்து கொண்டது. சுமார் ஆறு மணி நேரத்திற்குப்பின்  எறும்பு ஊர்வது போல வண்டி ஊர்வலம் நகர்ந்தது  பல நிலச்சரிவுகளை கடந்து மாலை ஏழு மணியளவில் ருத்ர ப்ரயாகையை வந்து அடைந்தோம். சுமார் 30 கி.மீ தூரத்தை கடக்க சுமார்  9  மணி நேரத்திற்கும் மேல் ஆனது. இன்றைய தினம் முழுவதும் நடு ரோட்டில் நின்று கொண்டு ஆங்காங்கே மண்டை காய்ச்சலுடன்  பராக்குப் பார்த்துக்கொண்டிருந்தோம். 

என்ன செய்வது என்று புரியாமல் 
அமர்ந்திருக்கும் வைத்தி அண்ணன்

வழியில் பெரிய நகரம் ஏதும் இல்லாமல் இருந்ததால் மதியம் எதுவும் சாப்பிட கிடைக்கவில்லை. ருத்ரபிரயாகையிலும் போக்குவரத்து நெரிசலின் காரணமாக எந்த உணவும் கிட்டவிலை, வெறும் பன்(Bun)தான்  இருந்தது. அதை வாங்கி சாப்பிட்டுவிட்டு சூடாக ஒரு சாயா குடித்து விட்டு,  கருங்குல் நேரத்தில் அப்படியே ருத்ரபிரயாகையை தரிசனம் செய்துவிட்டு இனியாவது பாதை சரியாக வேண்டுமென்று கிளம்பத் தயாரானோம்.

 அப்போது இனி ஒரு குழுவினர் அவர்களது பேருந்து  எங்களுடன் வந்து சேர்ந்து கொண்டனர். நாங்கள்  GMVN மூலம்  12 நாள் சார்தாம் யாத்திரைக்காக கிளம்பினோம், அவர்கள் 10 நாள் யாத்திரைக்காக இரண்டு நாள்  கழித்து கிளம்பியவர்கள், இராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த அன்பர்கள்,  அவர்கள் வழிகாட்டியின் உதவியினால் நான்கு தலங்களையும் தரிசனம் செய்து விட்டு மிகவும் மகிழ்ச்சியாக திரும்பி வந்து கொண்டிருந்தனர். அனைவரும் கேதார்நாத்தில் குதிரை மூலமாக பயணம் செய்ய வேண்டும் என்ற நிபந்தனையுடன் அழைத்து சென்று வெற்றிகரமாக கேதாரீஸ்வரரை தரிசனம் செய்து விட்டு வந்தோம் என்று கூறினார். அவரே ரிஷிகேஷம் வரைதான் பேருந்து செல்லும் அங்கு இரவு உணவிற்கும் ஏற்பாடு செய்துள்ளேன், உங்களுக்கும் வேண்டுமென்றால் சொல்லுங்கள் என்று கூறினார். நாங்களும் சரி என்று ஒத்துக்கொண்டோம், இந்த வழிகாட்டி நம்முடன் வந்திருந்தால் நாமும் நான்கு தலங்களையும் தரிசனம் செய்திருக்கலாமோ? என்ற எண்ணம் மனதில் தோன்றியது, எல்லாம் அவன் செயல், ஆட்டுவிப்பவன் அவன், நம் கையில் என்ன இருக்கின்றது, எங்கோ சிறு தவறு செய்து விட்டோம், சரியாக சங்கல்பம் செய்து விட்டு புறப்படுவரவில்லை, இனி ஒரு சமயம் அவர் அழைக்கும் போது வந்து தரிசனம் செய்யலாம் என்று மனதை தேற்றிக்கொண்டு பயணத்தை தொடர்ந்தோம். 

மிகுந்த உழைப்பாளிகளான
 மலைப் பிரதேச மக்கள் 

நள்ளிரவில்தான் ரிஷிகேஷை அடைவோம் என்பதால் இனி ஹரித்வார் செல்லவேண்டாம் ரிஶிகேஷிலேயே தங்கி விடலாம் என்று முடிவு செய்தோம். பத்ரிநாத்தில் சந்தித்த தேஷ்பாண்டே அவர்கள், ஹரித்வாரில் கர்நாடக சங்கத்தில் நாங்கள் தங்குவதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.  ரிஷிகேஷத்தில் தங்க முடிவு செய்ததால், திரு இரவி அவர்கள், அவருக்கு தெரிந்தவர் மூலமாக, திருக்கோவிலூர் மடத்தில் தங்குவதற்கான ஏற்பாடுகளை செய்தார். தேவ ப்ரயாகையில் இருந்து பாதை சரியாக இருந்தது, எனவே எங்கும் நிற்காமல் சுமார் 11 மணியளவில் ரிஷிகேஷ் வந்தடைந்தோம், GMVN யாத்திரை செய்ததன் பரிசாக பழ ரசமும், கங்கா தீர்த்தமும்  தந்தார்கள், அதிக ஒத்துழைப்பு தரவில்லை என்றாலும் 12  நாட்களும் எங்களை வழி நடத்திச்சென்ற வழிகாட்டி, வண்டி ஓட்டுநர் மற்றும் கிளீனர் ஆகியவர்களுக்கு சிறிது அன்பளிப்பு கொடுத்தோம். ஆச்சிரியத்துடனும் அதே சமயம் மகிழ்ச்சியுடனும் அதை அவர்கள் ஏற்றுக்கொண்டனர். பின்னர் இரவு  உணவை திருப்தியாக முடித்தோம். பல நாட்களுக்குப்பின்  சரியான உணவாக அமைந்தது அமிர்தமாக இருந்தது. பின்னர் கிளம்பி திருக்கோவலூர் மடம் வந்து சேரும் போது நள்ளிரவாகி விட்டது அங்கு தங்கினோம். தேவேந்திரன் உடல் நிலை எவ்வாறு சீராகியது என்பதை தெரிந்து கொள்ள ஆவலாக இருப்பீர்கள் அதை  அடுத்த பதிவில் காணலாமா அன்பர்களே?.