Tuesday, December 17, 2013

திருவெம்பாவை # 4

திருசிற்றம்பலம்




திருவெம்பாவை #4


ஒண்ணித்திலநகையாய்! இன்னம் புலர்ந்தின்றோ?
வண்ணக் கிளி மொழியார் எல்லாரும் வந்தாரோ?
எண்ணிக் கொடுள்ளவா சொல்லுகோம் அவ்வளவும்
கண்ணைத் துயின்றவமே காலத்தைப் போக்காதே!
விண்ணுக் கொரு மருந்தை வேத விழுப்பொருளைக்
கண்ணுக் கினியானைப் பாடி கசிந்துள்ளம்உள்நெக்கு
நின்றுருக யாமாட்டோம் நீயே வந்து
எண்ணிக் குறையில் துயில் ஏலோ ரெம்பாவாய்! ........(4)

எழுப்புபவள்:
ஒளி பொருந்திய முத்தினைப் போன்ற பற்களை உடைய பாவையே! உனக்கு இன்னும் பொழுது விடியவில்லையா?

படுக்கையிலிருப்பவள்:
கிளி போல மிழற்றும் நம் தோழிகள் அனைவரும் வந்து விட்டனரோ?

எழுப்புபவர்:
எண்ணிப் பார்த்து உள்ளபடி சொல்கின்றோம்; ஆனால் நேரமாகும், அதுவரையும் கண் உறங்கி காலத்தை வீணாக்காதே! தேவர்களுக்கும் மருத்துவரான வைத்தீஸ்வரனை, மறைகள் பேசுகின்ற உயர்வான பொருளை, கண்களுக்கு இனியவனைப் பாடி மனம் கசிந்து உள்ளம் உடைந்து நின்று உருகும் நாங்கள் எண்ண மாட்டோம். நீயே வந்து எண்ணி, எண்ணிக்கை குறைந்தால் மீண்டும் போய் உறங்கு.

No comments: