Wednesday, September 20, 2017

ஸ்ரீசக்ர நாயகி-1

நவராத்திரி 

நவராத்திரி நாளை துவங்குகின்றது. வழக்கம் போல் அம்பாளின் பல்வேறு கொலு கோலங்கள் தினமும் பதிவிட உள்ளேன். இவ்வருடம் முத்துசாமி தீக்ஷிதரின் கமலாம்பாள் நவாவர்ண கீர்த்தனைகளை உடன் பதிவிட அம்பாள் உத்தரவு.  இக்கீர்த்தனைகள் சமஸ்கிருதத்தில் உள்ளன, அடியேன் அறியாத மொழி எனவே திரு, குமரன் அவர்கள் பதிவிட்டதை ஒட்டி எழுதியுள்ளேன். அவர்களுக்கு நன்றி.          இன்றைய தினம்             மஹாளய அமாவாசையன்று, நவாவர்ண கீர்த்தனையின் கணபதி தியானம் மற்றும் அம்பாளின் தியான கீர்த்தனைகள் இடம் பெறுகின்றன. சென்ற வருடம் திருமயிலை கற்பகாம்பாளின் கொலு தரிசனத்தையும் கண்டு அருள் பெறுங்கள். 

அன்னை ஸ்ரீசக்ர நாயகி , அச்சக்கரத்தில் ஒன்பது ஆவரணங்கள் எனப்படும்  சுற்றுக்கள் உள்ளன. எனவேதான் அபிராமி பட்டரும் அன்னையை "ஒளி நின்ற கோணங்கள் ஒன்பதும் மேவி உறைபவளே" என்று போற்றினார்.  


சென்னை போக் சாலை 
முத்துமாரியம்மன் நவராத்திரி அலங்காரங்கள்

நவாவர்ண கிருதிகளை வரிசையாக இசைக்கும்போது ஆரம்பத்தில் இரண்டு  த்யான கிருதிகளை இசைப்பது ஒரு மரபு.

 முதலாவது கணபதி தியானம்
..
ராகம்-கௌளை                     தாளம்- திரிபுட

பல்லவி

ஸ்ரீமஹா கணபதி- ரவதுமாம்  ஸித்தி விநாயகோ மாதங்க முக (ஸ்ரீ)

அனுபல்லவி

காமஜனக விதிந்த்ர ஸந்நுத கமலாலய தட- நிவாஸோ
கோமளதர பல்லவபதகர குருகுஹாக்ரஜ சிவாத்மஜ: (ஸ்ரீ)

சரணம்

சுவர்ணாகர்ஷண விக்னராஜோ பாதாம்புஜோ கௌர வர்ண வஸநாதரோ பாலசந்த்ரோ நராதி விநுத லம்போதரோ
குவலயஸ்வவிஷாண -  பாசாங்குச மோதக ப்ரகாசகரோ
பவஜலதிநாவோ மூலப்ரக்ருதி ஸ்வபாவ சுகதரோ
ரவிஸஹஸ்ர ஸந்நிப தேஹோ கவிஜநனுத மூஷிகவாஹோ
அவநத தேவதா ஸமூஹோ அவிநாஸ கைவல்ய  தேஹ:  (ஸ்ரீ)

சகல சித்திகளையும் அருளச்செய்யும் யானைத் திருமுகம் கொண்ட ஸ்ரீ மஹாகணபதி என்னை காத்தருள வேண்டும்மன்மதனின் தந்தையாகிய விஷ்ணு மற்றும் பிரம்மா, இந்திரன் போன்ற தேவர்களால் வணங்கப்படுபவர். திருவாரூர் திருத்தலத்தின்  கமலாலயக் குளக்கரையில் அமர்ந்திருப்பவர். அழகுமிக்க தாமரை இதழ் போன்ற மென்மையான பாதங்களையுடையவர். குருகுஹனான அழகு முருகனின்  மூத்தவன், பரமசிவனாரின் அன்பு மகன்.

சுந்தரருக்காக தங்கத்தை மாற்றுரைத்தவர். தாமரை பூக்களின்மீது நடனமாடுபவர், வெண்பட்டாடை அணிந்தவர், சிரசில் பிறைச்சந்திரனை தரித்து பாலசந்த்ரன் எனப் பெயர் பெற்றவர், மனிதர்களால் பெரிதும் பிரியத்துடன் வணங்கப்படுபவர், தன் வயிற்றினில் உலகனைத்தையும் அடக்கி அதனால் பெருவயிறு படைத்தவர், கைகளில் குவளை மலர்,  ஒடிந்த தந்தம், பாசக்கயிறு, அங்குசம், மோதகம், ஆகியவற்றை ஏந்தியிருப்பவர், எப்போதும் ஒளிப்பிழம்பாக பிரகாசிப்பவர், பிறவிப் பெரும் கடலை கடக்க மனிதர்களுக்கு தோணியாகி கரை சேர்ப்பவர், ஆதி முதற்காரணப் பொருளாக விளங்குபவர், வணங்கியவர்களுக்கு மங்களத்தை அளிப்பவர்கோடி சூர்யப் பிரகாசம் போன்று ஒளிமயமாகத் திகழ்பவர், மூஞ்சூறு வாகனர், தேவர் குழாங்களால் துதிக்கப்படுபவர், ஜீவாத்மா- பரமாத்மா உறவின் கடைசி நிலையான ஐக்கியத்தை அருள்பவர், இப்படியெல்லாம், புகழ் பெற்ற கணபதி என்னை காப்பாற்றட்டடும்.

பலஸ்ருதி: வினாயகப்பெருமானின் அருள் கிட்டும். தடைகள் தகர்ந்து நலம் பெருகும்.


கற்பகாம்பாள் அன்ன வாகன சேவை 

கற்பகாம்பாள் காமதேனு வாகனத்தில் 
மஹாகௌரி கொலு 

கற்பகாம்பாள் கம்பாநதி காட்சி 


இரண்டாவது  பாடல் அம்பிகை தியானப் பாடல்.  வழி வழியாக முதலில் பாடப்படும் பாடல்.

ராகம் -  தோடி                                                               தாளம் -  ரூபகம்

பல்லவி

கமலாம்பிகே அம்ப  ஆஸ்ரித  கல்ப லதிகே சண்டிகே
ஜகதம்பிகே கம நீயா ருணாம் ஸுகே
கர வித்ருத ஸுகே  மாமவ  ......கமலாம்பிகே

அனுபல்லவி

கமலாஸநாதி பூஜித கமலபதே பஹு வரதே
கமலாலய தீர்த்த வைபவே ஸிவே கருணார்ணவே  (கமலாம்பிகே)

சரணம்

ஸகல லோக நாயிகே சங்கீத ரசிகே
ஸுக வித்வ ப்ரதாயிகே ஸுந்தரி கதமாயிகே
விகளேபர முக்திதாந நிபுணே அகஹரணே
வியதாதி பூத கிரணே விநோத சரணே அருணே

மத்யமம்

ஸகளே குருகுஹ சரணே ஸதாஸிவாந்த:  கரணே
 பாதி வர்ணே அகண்டைகரசபூர்ணே (கமலாம்பிகே)

திருவாரூரில் புகழுடன் விளங்கும் கமலாம்பிகையே உன்னை அநந்யமாய் சரணடைந்தவர்களுக்கு கற்பகக் கொடியே!,            சண்டிகாதேவியே! , திருக்கரத்தில்   கிளியை ஏந்தி  எழில் மிளிரும் சிகப்பு பட்டுச்சேலை உடுத்தி அழகாக விளங்குபவளே, அகில உலகத்திற்கும் அன்னையே!  என்னை காத்தருள்வாயாக.

தாமரையில் தோன்றிய பிரம்மா முதலியவர்களால் பூஜிக்கும் தாமரைத் திருவடிகளை உடையவளே, பக்தர்களுக்கு விரும்பிய வரங்களை அருள்பவளே, கமலாலயம் என்ற குளத்துக்கு சிறப்புச் சேர்ப்பவளே, சிவமாகும் மங்கல வடிவினளே, கருணைக் கடலே!  கமலாம்பிகையே என்னை காத்தருள்வாயாக.

சகல உலகங்களுக்கு நாயகியே, இசையை விரும்பி ரசிப்பவளே, கவித்துவ ஞானத்தை நல்குபவளே,   அழகியவளே, மாயையிலிருந்து விடுபட்டு இருப்பவளே, விதேக முக்தி அருளும் வல்லபம் உள்ளவளே! முப்பிறப்பிலும் செய்த பாவங்களை போக்குபவளே, பஞ்சபூதங்களுக்கும் சக்தியை அளிப்பவளே, ஒளி பொருந்தியவளே, விதவிதமாக ஆசனங்களை போட்டு கொலு வீற்றிருக்கும் போது விநோதமான திருவடிகளின் நிலைகளினால் அழகிய தோற்றம் தரும் பாதார விந்தங்களை  உடையவளே,  இளம் சிவப்பு வர்ணமுடையவளே

அனைத்துக் கலைகளுக்கும் உறைவிடமானவளே, குருவாய் வந்த முருகனின்  அன்னையே, என்றும் சதாசிவனின் உள்ளத்துள் உறைபவளே, அகார க்ஷகார முதலிய மாத்ருகா வர்ண சொரூபிணியே! ஒப்பற்ற ஆனந்தத்தின் பூரண வடிவாய் விளங்குபவளே, திருவாருரில் ஒளிர்பவளான கமலாம்பிகையே என்னைக் காத்தருள்வாய்.

காமகலா வடிவமாக விளங்கும் கமலாம்பிகையின் நிர்குண ஸ்வரூபம், சகுண நிராகாரம் முதலிய வடிவங்கள் இக்கீர்த்தனையில் விமர்சிக்கப்பட்டுள்ளன. 



அன்னையின் தரிசனம் தொடரும் . . . . . . 

4 comments:

ராஜி said...

பதிவு அருமை

S.Muruganandam said...

மிக்க நன்றி தொடர்ந்து வாருங்கள் ராஜி. நவராத்திரி நல்வாழ்த்துக்கள்.

Anuprem said...

மிக அருமையான பகிர்வு..


அம்மையின் படங்கள் எல்லாம் வெகு அழகு...

S.Muruganandam said...

மிக்க நன்றி அனுராதா, தொடர்ந்து வாருங்கள்.